தகுதித் தேர்வில், வெற்றிபெற்ற பழைய மாணவர்கள் தொழிற் கல்வியில் சேர வகை செய்யும், சட்டப் பிரிவை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்,
பழைய மாணவர்களை, தொழிற்கல்வியில் சேர்க்க வகை செய்யும், சட்டப் பிரிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சில மாணவர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த ஆண்டில், மருத்துவப் படிப்பில் சேர்ந்த பழைய மாணவர்கள், தங்கள் இடங்களை, சரண்டர் செய்யவும், பழைய வகுப்பிலேயே கல்வியை தொடரவும், அந்த மனுக்களில் கோரப்பட்டு இருந்தது.
மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:இதுபோன்ற மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. அதை எதிர்த்த அப்பீல் மனுக்களை, உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. இப்போது, சட்டப் பிரிவை எதிர்த்து, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்துதான், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, பகுதி பகுதியாக மனுத்தாக்கல் செய்வதை, ஏற்க முடியாது.மருத்துவப் படிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், படிப்பில் சேர்ந்து விட்டனர். அதற்கு இடையூறு செய்ய, நாங்கள் விரும்பவில்லை. இந்த மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.