தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம் மாநில தலைவர் பேட்டி
தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறார்க
ள் என்று மாநில தலைவர் பழனிச்சாமி கூறினார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிச்சாமி நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று முதல் வேலைநிறுத்தம்
வரையறுக்கப்பட்ட ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்பட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஏப்ரல் 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி நாளை (இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும்.
சிறை நிரப்பும் போராட்டம்
முதல் கட்டமாக நாளை (இன்று) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சத்துணவு ஊழியர்களின் ஆர்ப்பாட்டமும், மறு நாள் (16-ந் தேதி) உண்ணாவிரதமும் நடத்தப்படும். 17-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை அரசு முடக்க முயற்சித்து வருகிறது.
பல மாவட்டங்களில் மூடப்பட்ட சத்துணவு மையங்களை சட்டவிரோதமாக திறந்தும், புதிய பணியாளர்கள் மற்றும் மாற்று பணியாளர்களை நியமித்தும் உள்ளது மற்றும் ஊழியர்களை பணி நீக்கம், பணியிடை நீக்கம் செய்யப்போவதாகவும் மிரட்டி வருகிறது.
80 ஆயிரம் பேர்
அரசு என்ன தான் அடக்குமுறை நடவடிக்கைகளை கையாண்டாலும் சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வெற்றிகரமாக நடக்கும். மொத்தம் உள்ள 80 ஆயிரம் பணியாளர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள். போராட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறை நிரப்பும் போராட்டம் முடிந்த பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.