கையால் எழுதிய, காலாவதி தேதி நெருங்கிய பாஸ்போர்ட்தாரர்களுக்கு சென்னையில் 27ம் தேதி சிறப்பு முகாம்
கையால் எழுதப்பட்ட, குறைந்த பக்கங்கள் கொண்ட மற்றும் காலாவதி தேதி நெருங்கிய பாஸ்போர்ட்தாரர்களுக்கான சிறப்பு முகாம் சென்னையில் வரும் 27ம் தேதி நடக்கிறது. கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஒட்டப்பட்ட
புகைப்படம் கொண்ட பாஸ்போர்ட்டுகள் சர்வதேச அளவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை வெளிநாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பதுடன் அத்தகையவர்களுக்கு விசாவும் வழங்க மறுக்கிறது. எனவே, குறிப்பிடப்பட்ட அந்த தேதியையும் தாண்டி கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் வேறு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல, பாஸ்போர்ட் காலாவதியாக 6 மாதம் இருக்கும் பட்சத்தில் சர்வதேச பயணம் செய்யும் பாஸ்போர்ட்தாரர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். மேலும், சில நாடுகள் பாஸ்போர்ட்டில் இரண்டு பக்கங்களுக்கும் குறைவாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, சர்வதேச பயணிகள் வெளிநாட்டு பயணத்திற்கு முன் தங்கள் பாஸ்போர்ட்டை சோதித்து கொள்வதுடன், குறைவான பக்கங்கள் இருக்கும் பட்சத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு தொடர் பயணம் மேற்கொள்பவர்கள் 64 பக்கங்கள் கொண்ட “ஜம்போ“ பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட், காலாவதியாக 6 மாதம் மற்றும் அதற்கும் குறைவாக இருக்கும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், இரண்டு மற்றும் அதற்கும் குறைவான பக்கங்களே உள்ள பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் நடக்கிறது. இதற்கு, நேற்று முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.