தமிழகத்தில் மறு வெளியீடு செய்யப்பட்ட கிஸான் விகாஸ் பத்திரத்தின் முதல் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
சென்னை அண்ணா சாலையிலுள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் சென்னை நகர மண்டலத்தின் அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர், கிஸான் விகாஸ் பத்திரத்தின்
முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மறு வெளியீடு செய்யப்பட்ட கிஸான் விகாஸ் பத்திரங்களை அறிமுகம் செய்தார்.
தமிழகம், சென்னை அஞ்சல் வட்டத்துக்குட்பட்ட தலைமை அஞ்சல் நிலையங்களில், புதன்கிழமை முதல் பத்திரங்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற அஞ்சலகங்களில் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை முதல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
கிஸான் விகாஸ் பத்திரம் ரூ.1,000, ரூ.5,000, ரூ. 10,000,ரூ. 50,000 ஆகிய முகமதிப்பில் கிடைக்கும். இவற்றின் முதிர்வு காலம் 100 (8 ஆண்டு, 4 மாதம்) மாதங்களாகும். இந்தச் சேமிப்புத் திட்டத்தில், இரண்டு மடங்குத் தொகையை முதலீட்டாளர்கள் பெறலாம். முதிர்வு காலத்துக்கு முன்பு பணம் பெற விரும்பும் முதலீட்டாளர்கள், முதலீடு செய்த 30 மாதத்துக்குப் பின்னரே அவற்றைப் பெற முடியும்.
இந்தத் திட்டம் சாமானிய மக்களுக்கு முதலீட்டு வாய்ப்பளிக்கும் திட்டமாகும். இந்தியாவில் சேமிக்கும் பழக்கம் 36 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதை அதிகரிக்கும் நோக்கத்தில், இந்தத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அடமானம் வைக்கும் வசதி போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. அஞ்சலகங்கள் "கோர் பேங்கிங் வசதிக்கு மாற்றப்பட்டு வருவதால், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இந்த வசதி உள்ள அஞ்சலகத்தில் முதிர்வு பெற்ற தொகையை உடனே பெற முடியும்.
நகல் பெறும் வசதி.. முதிர்வு காலத்துக்கு முன்னரே, முதலீட்டுத் தொகையைப் பெற்றால், எந்தக் காலக்கட்டத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது போன்ற பல தகவல்கள் பத்திரங்களில் அச்சிடப்பட்டிருக்கும். முதலீடு செய்த பத்திரம் தொலைந்து போனாலும், அவற்றின் நகல் பத்திரங்களைப் பெற முடியும் என்றார் அவர்.