பாலாசூர்:அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்க கூடிய, அக்னி - 2 ஏவுகணை சோதனை, நேற்று வெற்றிகரமாக நடந்தது.
ஒடிசா மாநிலம் பாலாசூரில், நடமாடும் ஏவுதளத்தில் இருந்து, அக்னி - 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நேற்று நடத்தப்பட்டது. இதுகுறித்து, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:அக்னி ஏவுகணைகள்,
தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, அவ்வப்போது சோதித்து பார்க்கப்படுகின்றன. இதன்படி, அக்னி - 2 ஏவுகணை, கடந்தாண்டு ஏப்ரலில் சோதித்து பார்க்கப்பட்டது.தற்போது, இதில் சில நவீன தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, ஏவுகணையை துல்லியமாக இலக்கை நோக்கி செலுத்தக் கூடிய வகையிலான தொழில்நுட்ப வசதி புகுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிநவீன ரேடார்கள் மூலம் இயக்கும் வகையில், இந்த ஏவுகணையின் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.ராணுவமும், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறையும் சேர்ந்து இந்த ஏவுகணையை உருவாக்கிஉள்ளன. இந்த ஏவுகணை, 2,000 கி.மீ., துாரம் வரை சென்று தாக்க கூடியது; 1,000 கிலோ எடையுள்ள வெடி பொருட்களை சுமந்து செல்லும் திறன் உடையது.இவ்வாறு, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.