''தீயணைப்புத் துறையில், காலியாக உள்ள 1,000 பணியிடங்கள், மூன்று மாதங்களில் நிரப்பப்படும்,'' என, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி இயக்குனர்,
ரமேஷ் குடவாலா தெரிவித்தார்.
ரூ.18 கோடி:
மதுரையில், அவர் கூறியதாவது: தீயணைப்புத் துறைக்கு, அரசு, 18 கோடி ரூபாய் வழங்கியது. இதைக்கொண்டு நுரை தள்ளும் வண்டி ஐந்து மற்றும் 30 நீர் வண்டிகள் வாங்கப்பட உள்ளன. அனைத்து மாவட்ட அலுவலங்களுக்கும், 'இன்டர்நெட்' வசதி செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்புத் துறையில், 1,000 காலி பணியிடங்கள் உள்ளன. சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், மூன்று மாதங்களில் நிரப்பப்படும். சர்வீஸ் அடிப்படையில், வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 308 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றில், வாடகை கட்டடங்களில் இயங்கும், 72 நிலையங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு, இரண்டு நிலையங்கள் சொந்த கட்டடங்களுக்கு மாற்றப்படுகின்றன.
மாதம் இருமுறை:
வீரர்கள், மாதத்திற்கு இருமுறை, 'மாஸ் டிரில்' செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. சிவகாசி பட்டாசு ஆலைகளில், வெடிமருந்து பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது, தீயணைப்புத் துறையினரையும் அழைத்துச் செல்ல வேண்டும் போன்ற பரிந்துரைகளும், அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. எஸ்.எம்.எஸ்., மூலம், தகவல் தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். சென்னை பாலவாக்கத்தில், 12.84 ஏக்கரில், நவீன வசதிகளுடன் பயிற்சி மையம் அமைகிறது. மதுரையில், மண்டல பயிற்சி மையம் துவங்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.