அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி மாணவருக்கான வினாத்தாள் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக வசூலித்தால், புகார் தெரிவிக்கலாம் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஒரே மாதிரியான காலக்கட்டத்தில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வை நடத்த வேண்டும். அதற்காக வெளியிடப்படும் தேர்வு அட்டணையை, அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.
மேலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும், இடைத்தேர்வு, திருப்புத்தேர்வு, காலாண்டு, அரையாண்டு, அலகு தேர்வு ஆகியவற்றை, தனியார் பள்ளிகளும் கட்டாயம் நடத்த வேண்டும். அதற்காக, தனியார் பள்ளிகளிடம் இருந்து, வினாத்தாள் மற்றும் மதிப்பெண் தகுதிச் சான்று ஆகியவற்றிற்காக, தலா ஒவ்வொரு மாணவரிடமும் கட்டணம் வசூலிக்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறை உத்தரவுபடி, தனியார் பள்ளி மாணவர்களிடம், தேர்வு கட்டணம் மற்றும் மதிப்பெண் தகுதிச் சான்றுக்காக, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 20, எஸ்.எஸ்.எல்.ஸி.,க்கு, 50, ப்ளஸ் 1க்கு, 30, ப்ளஸ் 2க்கு, 70 ரூபாய் என, ஒரு ஆண்டுக்காக வசூலிக்கப்படும்.
அதேபோல், அரசின் விதிமுறைப்படி, அரசுப்பள்ளி மாணவர்களும் வினாத்தாள் கட்டணம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கான கட்டணம் ஆகியவை வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது.
அதன்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 20, ஒன்பதாம் வகுப்பு, 30, எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு, 65, ப்ளஸ் 1 வகுப்பு, 30, ப்ளஸ் 2 வகுப்பு, 70 ரூபாயுடன், கூடுதலாக, ஆறு முதல், ப்ளஸ் 2 வகுப்பு மாணவர் வரை, தலா, 50 ரூபாய் பெற்றோர் ஆசிரியர் கழக நிதிக்காவும் வசூலிக்கப்படுகிறது.
மேலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்கள், கூடுதலாக, 200 ரூபாயை, மேற்கண்ட வினாத்தாள் கட்டணம், பெற்றோர் ஆசிரியர் கட்டணம் ஆகியவற்றுடன் சேர்த்துக் கட்ட வேண்டும். ஆனால், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, சில பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பி.டி.ஏ., நிர்வாகிகள், மாணவர்களிடம், கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளிக்கல்வித்துறை உத்தரவுபடி, வினாத்தாள் கட்டணம், பி.டி.ஏ., கட்டணம், மேல்நிலை மாணவருக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கட்டணம் ஆகியன, ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டவை. அவற்றை, மாணவரிடம் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அந்த நிர்ணய தொகைக்கு மேலாக, கூடுதலாக பல்வகை கட்டணம் என்ற பெயரில் வசூலித்தால், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
Posted by rajkumar Sathish