வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், இனி ஏ.டி.எம்.,கள் மூலம், இஷ்டத்திற்கு பணம் எடுக்க முடியாது. அப்படி பணம் எடுத்தால், அதிக கட்டணம் செலுத்த வேண்டியது நேரிடும்.
வழிகாட்டி குறிப்பு : இந்திய வங்கிகள் சங்கத்தின் பரிந்துரைப்படி
, ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பது தொடர்பாக, புதிய வழிகாட்டிக் குறிப்புகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதில், கூறப்பட்டு உள்ளதாவது: சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, ஐதராபாத், டில்லி மற்றும் மும்பை ஆகிய ஆறு பெரு நகரங்களில், வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், இனி, தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,களில், மாதத்திற்கு, ஐந்து முறையும், இதர ஏ.டி.எம்.,களில், மாதத்திற்கு மூன்று முறையும் மட்டுமே, கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதற்கு மேல், எந்த வங்கியின் ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தாலும்,
ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும், 20 ரூபாய் கட்டணம் செலுத்த நேரிடும். இந்த புதிய விதிமுறைகள், நவம்பர் ?ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
தற்போது, ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர், இதர வங்கிகளின் ஏ.டி.எம்.,களில், மாதத்திற்கு ஐந்து முறை பணம் எடுக்கலாம். ஆனால், தாங்கள் கணக்கு வைத்திக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல், எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். அதற்கு தற்போது கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
அமலுக்கு வருகிறது : ஆறு பெருநகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, இந்த கட்டுப்பாடு அமலுக்கு வரும். மற்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு, இந்த கட்டுப்பாடு கிடையாது.
இதுதவிர சிறிய ரக கணக்கு வைத்திருப்போர், அடிப்படையான சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் போன்றோருக்கு, இந்த கட்டுப்பாடு பொருந்தாது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த, மார்ச் மாத நிலவரப்படி, நாடு முழுவதும், 1.60 லட்சம் ஏ.டி.எம்.,கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.