Skip to main content

இணைய சீண்டலுக்கு தீர்வு சொல்லும் 14 வயது மாணவி!

இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் இணைய சீண்டலுக்கு (சைபர்புல்லிங்) எளிதான தீர்வை முன் வைத்து வியக்க வைத்துள்ளார் 14 வயதான இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அமெரிக்க மாணவி திரிஷா பிரபு. கூகுள் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் அறிவியல் போட்டியில் இந்த தீர்வை
முன் வைத்து அவர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறார்.
இணையத்தை அறிந்தவர்களுக்கு அதன் இன்னொரு முகமான சைபர்புல்லிங் பற்றியும் நன்றாகவே தெரிந்திருக்கும். கருத்துக்கள், பின்னூட்டங்கள் மூலமாக இணையம் வழியே ஒருவரை சீண்டி விட்டு தொல்லைக்கு ஆளாக்கும் வழக்கமே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
பல நேரங்களில் இந்த இணைய சீண்டல், விளையாட்டு நோக்கில் இருந்தாலும் சில நேரங்களில் விபரீதமாகி விடுவதும் உண்டு. வெறுப்பை கக்கும் கருத்துக்கள் பல , துவேஷத்தை வெளிப்படுத்தும் தாக்குதல் என இணைய சீண்டலில் பல வகை உண்டு. இணைய சீண்டலால் சித்திரவதைக்கும் ,மன உளைச்சலுக்கும்  ஆளான அப்பாவிகள் இருக்கின்றனர். இணையச்சீண்டலால் உயிரை மாய்த்துக்கொண்ட பரிதாபத்துக்குரியவர்களும் இருக்கின்றனர். இணைய சீண்டலை நினைத்து நடுங்கும் இளம் உள்ளங்களும் உண்டு. தவிக்கும் பெற்றோர்களும் உண்டு. சிறியவர்,பெரியவர் மற்றும் வல்லுனர் என எல்லோரும் அறிந்ததுதான் இந்த பிரச்னை என்றாலும் இதற்கான தீர்வு என்ன என்றுதான் தெளிவாக யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.
பிஞ்சு உள்ளங்களை அதிகம் பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு அழகான தீர்வை ஆய்வு செய்து அளித்திருக்கிறார், அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 13 வயது மாணவியான த்ரிஷா பிரபு. கூகுள் நடத்தும் அறிவியல் போட்டியில் பங்கேற்றவர் , சைபர்புல்லிங்கிற்கான தீர்வு முறையை முன்வைத்து இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறார்.
த்ரிஷா முன்வைத்துள்ள தீர்வுக்கு பெயர் ரீதிங்க், அதாவது மறு யோசனை. த்ரிஷா சொல்லும் இந்த தீர்வு மிகவும் எளிதானது. ஆவேச மற்றும் துவேஷ கருத்துக்களை இணையத்தில் வெளியிடும் இளசுகளுக்கு , அந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் முன் அவை பிறரது மனதை புண்படுத்தக்கூடியது என எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதுதான் அவர் சொல்லும் யோசனை. இவ்வாறு எச்சரிக்கை செய்து விட்டு, இனியும் வெளியிட விருப்பமா ? என கேட்டால் பெரும்பாலானோர்  அத்தகைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பார்கள் என்று இந்த மாணவி சொல்கிறார். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று சொல்வார்களே அதே போல, இணையத்தில் உலாவும் போது மனதில் தோன்றியதை ஆவேசமாக பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு , அத்தகைய கருத்துக்களை சாஃப்ட்வேர் மூலம் இனம் கண்டு மறுமுறை யோசிக்க வைத்தால் போதுமானது என்கிறார் த்ரிஷா.
பெரும்பாலான இளசுகள் அதிகம் யோசிக்காமல் ,குறிப்பாக பின்விளைவுகள் மற்றும் பாதிப்புகள் பற்றி யோசிக்காமல் எடுத்த எடுப்பில் கருத்துக்களை வெளியிட்டு விடுவதால்தான் சில நேரங்களில் விபரீதம் ஏற்படுகிறது என கூறும் த்ரிஷா , இவர்களை சிந்திக்க வைப்பதே ரீதிங்க்கின் குறிக்கோள் என்கிறார்.
இதற்கு நல்ல பலன் இருக்கும் என்று அவர், தான் சமர்பித்த திட்டத்தில் கூறியுள்ளார். ஆனால் திரிஷா இதை சும்மா கூறிவிடவில்லை. இதற்காக தீவிரமாக ஆய்வு செய்திருக்கிறார். சைபர்புல்லிங்கிற்கான தீர்வை நாடுவது என தீர்மானித்ததுமே, இதற்கான ஆய்வில் ஈடுபட்டார். பேஸ்லைன் மற்றும் ரீதிங்க் என இரண்டு முறைகளை உருவாக்கி , அதில் 500 க்கும் மேற்பட்டோரை பங்கேற்க கேட்டுக்கொண்டார். பேஸ்லைன் முறையில் துவேஷ கருத்துக்களை வெளியிடும் போது , அதை வெளியிட வேண்டும் என்று மட்டும் கேட்கும். ரீதிங்க் முறையில் ஆவேச கருத்துக்களை வெளியிடும் முன், இந்த கருத்துக்கள் விபரீதமானவை, பின் விளைவுகளை உண்டாக்கும் , இதை வெளியிட விருப்பமா? என்பது போல எச்சரிக்கை செய்யப்பட்டது. முதல் முறையில் 67 சதவீதம் பேர் தங்கள் கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர். ஆனால் இரண்டாவது முறையில் 93 சதவீதம் பேர் , எச்சரிக்கைக்கு பிறகு தங்கள் மனதை மாற்றிக்கொண்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே த்ரிஷா ரீதிங்க் சாஃப்ட்வேரை கூகுள் அறிவியல் போட்டிக்கு சமர்பித்துள்ளார். இது இறுதி சுற்றுக்கு உரியதாக தேர்வாகியுள்ளது.
இந்த முறைய மேம்படுத்த பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், இணையத்திலும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதன் மூலம் இணைய சீண்டலுக்கு தீர்வு காணலாம் என்றும் நம்புகிறார்.

இந்த திட்டம் பற்றி அவர் கூகுள் அறிவியல் போட்டிக்கான இணையதளத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த கண்டுபிடிப்பு முதல் பரிசை வெல்கிறதா என அடுத்த மாதம் தெரியவரும். ஆனால் ,இணைய சீண்டல் இல்லாத இணையம் காண வேண்டும் எனும் அவரது நம்பிக்கை பாராட்டுக்குறியது.
த்ரிஷா பிரபு , சிக்காகோவில் நெபர்வில்லேவில் உள்ள பள்ளியில் 8வது கிரேடு படிக்கிறார். அவரைப்பற்றிய இணைய தேடலில் ஈடுபட்ட போது அவர் 9 வயதிலேயே புத்தகம் எழுதி அசத்தியிருக்கும் விஷயமும் தெரிய வந்தது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி