சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின. பி.டி.எஸ். கலந்தாய்வில் 3 இடங்கள் நிரப்பப்படவில்லை.
அண்ணாமலை பல்கலை. எம்.பி.பி.எஸ். (மருத்துவம்), பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு, பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. எவ்வித
நன்கொடையும் இன்றி தகுதி அடிப்படையில் முதன்முதலாக அனுமதி சேர்க்கை நடைபெற்றதால் இக்கலந்தாய்வில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
150 எம்.பி.பி.எஸ். இடங்கள், 100 பி.டி.எஸ். இடங்களுக்கு மொத்தம் 7,421 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வுக்கு மொத்தம் 1,692 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில் பொதுப்பிரிவினர் (OC)- 115, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) -1,063, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) (BC)- 69, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC)- 269, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)- 133, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SCA) (அருந்ததியினர்)- 21, பழங்குடியினர் (ST)- 13, மாற்றுத் திறனாளிகள் (ஈண்ச்ச்ங்ழ்ங்ய்ற்ஹப்ஹ் அக்ஷப்ங்க் இஹய்க்ண்க்ஹற்ங்ள்)- 9 பேர் ஆவர்.
ஓசூர் மாணவர் முதலிடம்: கலந்தாய்வில், பொதுப்பிரிவில் ஓசூரைச் சேர்ந்த டி.ராகுல் முதலிடம் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 198.25. மதுரையைச் சேர்ந்த மாணவி ஜி.சி.எஸ்.பவித்ரா, இரண்டாவது இடமும் (கட்-ஆஃப் மதிப்பெண் 198.25), விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த மாணவி இ.சூரியபிரபா (கட்-ஆஃப் மதிப்பெண் 198.25) மூன்றாம் இடமும் பிடித்தனர்.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மாற்றுத்திறனாளி மாணவர் முகிலுக்கு அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 195.25.
இந்த மாணவ, மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் படிப்புக்கான அனுமதி சேர்க்கை ஆணைகளை பல்கலை. நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வழங்கினார்.
எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பின: கலந்தாய்வில், பொதுப்பிரிவினர் (OC)- 46 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (BC) 40 இடங்களும் (இதில் மாற்றுத்திறனாளி ஒருவர் அடங்குவர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (MBC) 30 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் (முஸ்லிம்) (BCM) - 5 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் (SC)- 23 இடங்களும், தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) பிரிவில் (SCA) - 4 இடங்களும், பழங்குடியினர் பிரிவில் (ST)- 2 இடங்களும் நிரம்பின.
பி.டி.எஸ்.: தொடர்ந்து பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தமுள்ள 100 இடங்களில் 97 இடங்கள் நிரம்பின. பொதுப்பிரிவினர் (OC)- 31 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கான (BC) 27 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (MBC) 20 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)(BCM) - 3 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)- 15 இடங்களும், பழங்குடியினர் (ST)- 1 ஆகிய இடங்கள் நிரம்பின. தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) பிரிவில் (SCA) - 3 இடங்களும் நிரம்பவில்லை.
இந்நிகழ்வில் பதிவாளர் ந.பஞ்சநதம், சிண்டிகேட் உறுப்பினர் கானூர் பாலு, பல்கலை. வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், மாலினி, வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் என்.என்.பிரசாத், பல் மருத்துவப்புல முதல்வர் மைதிலி, கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் டி.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.