மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்தால், அவர்களது சேர்க்கைக் கட்டணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் புதிய நிபந்தனைகளைத் தெரிவித்துள்ளது. அதில், மாணவர்களைக் கல்லூரியின் சேர்க்கைக் கட்டணம், பாடப் பிரிவு, நிர்வாக வசதிகள் உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தகத்தை வாங்குமாறு வற்புறுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் கல்லூரி இணையதளங்களில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கல்லூரி இணையதளத்தில் புகார் செய்யும் வசதி இடம்பெற்றிருக்க வேண்டும். அதில் வரும் புகார்களுக்கு, 30 நாட்களில் தீர்வு காண வேண்டும். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
மாணவர்கள் சேர்க்கையின்போது, அசல் சான்றிதழ்களைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சுய கையொப்பமிட்ட நகல்களே போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது மட்டும் அசல் சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு, மாணவர்களிடம் திரும்பக் கொடுத்துவிட வேண்டும்.
தேர்வுக் கட்டணம் அல்லது ஓராண்டுக்கான கட்டணம் மட்டுமே மாணவர்களிடம் இருந்து பெற வேண்டும். ஒட்டுமொத்தப் படிப்புக் காலத்துக்கான கட்டணத்தை ஒரே முறையில் பெறக் கூடாது.
மாணவர்கள் சேர்க்கை முடியும் முன்பு மாணவர் வேறு கல்லூரியில் சேர விரும்பினால், அவர் செலுத்திய கட்டணத்தில் 5 சதவிகிதக் கட்டணத்தை மட்டும் பிடித்துக்கொண்டு மற்ற தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டால், அவர் செலுத்திய கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. டெபாசிட் பணம் மட்டும் கொடுக்க வேண்டும்” என்று யுசிஜியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. யுஜிஜி மானியம், உயர் கல்வி மானியம் ரத்து செய்யப்படும். சிறப்புத் திட்டங்களுக்கு யுஜிசி உதவி செய்வதும் நிறுத்தப்படும். இது தொடர்பான அறிவிப்பும் விளம்பரங்களாக வெளியிடப்படும். கல்வி நிறுவன அங்கீகாரத்தை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment