இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணியக் கோரி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு அரசாணை வெளிட்டால் மட்டும் போதாது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், "மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும், அதை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அரசு உடனடியாக இதை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்புரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 21) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்று 2007இல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது, அதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக அரசு இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது குறித்து, வரும் 23ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments
Post a Comment