போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த இந்தியாவில் புதிய குழு அமைக்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர் விவரத்தை அளித்தால் தனிநபர் ரகசியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு மோசமான
துஷ்பிரயோக பாதிப்பு ஏற்படும்’’ என மத்திய அரசிடம் வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது. வாட்ஸ்ஆப் போன்ற சமூக இணையதளங்களில் பரவும் வதந்திகளால் நாட்டில் கூட்டு வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடந்தன. இவற்றை அனுமதிக்க முடியாது என கடந்த மாதம் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்த, சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமூக ஊடக துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினருடனும் ஆலோசிக்கப்படும் என்றார். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதில் அளித்த வாட்ஸ்ஆப் நிறுவனம், ‘‘போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதை கண்காணிக்க இந்தியாவில் தனி குழு அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். தகவல் அனுப்புபவர் விவரத்தை அளித்தால், தனிநபர் ரகசியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு மோசமான துஷ்பிரயோக பாதிப்பு ஏற்படும்’’ என தெரிவித்துள்ளது.
இதனால் அரசின் முக்கிய கோரிக்கைக்கு, வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் தீர்வு காணவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து வாட்ஸ்ஆப் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘குடும்பங்கள், டாக்டர்கள், வங்கிகள் மிக முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வாட்ஸ்ஆப்பை சார்ந்துள்ளனர். போலீசாரும் விசாரணை மற்றும் குற்றங்கள் தொடர்பான் தகவல்களை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து கொள்கின்றனர். எனவே வாட்ஸ்ஆப் தகவல் அனுப்புபவரின் விவரத்தை தெரிவித்தால், அது தனிநபர் ரகசியத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி மோசமான துஷ்பிரயோக பாதிப்பு ஏற்படும். இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோருக்கு சேவை அளிக்கவும், இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்யவும், இந்தியாவில் இரு மூத்த அதிகாரிகள் தலைமையில் தனி குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். மக்கள் பாதுகாப்புக்கு உதவும் வகையில் வாட்ஸ் ஆப்-ஐ மேம்படுத்துவதில்தான் எங்கள் கவனம் உள்ளது’’ என்றார்.
Comments
Post a Comment