பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே. நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 71 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 122 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்திசெய்யப்பட உள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பிப். 5 முதல் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.காலிப்பணியிடங்கள் விவரம் மற்றும் இன சுழற்சி விவரங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.
சத்துணவு மைய அமைப்பாளர் பதவிக்கு பொதுப் பிரிவினர்,தாழ்த்தப்பட்டோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும், பழங்குடியினர் 8 ஆம் வகுப்பும் படித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் 21 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும், பழங்குடியினர் 18 முதல் 40 வயதுக்குமிகாதவராகவும், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் 20முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.மேலும், நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே 3 கிலோ மீட்டருக்குள் இருப்பதோடு, சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.சமையல் உதவியாளர் பதவிக்கு பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்டோர் 5 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.பழங்குடியினர் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர், தாழ்த்தப்பட்டோருக்கு 21 முதல் 40வயதுக்கு மிகாதவராகவும், பழங்குடியினர் 18 முதல் 40வயதுக்குள்ளும், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பத்தாரர் குடியிருப்புக்கும் இடையே 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். இப்பதவிகளுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்று, சாதி சான்றிதழ், வருமானச் சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோராக இருந்தால் அதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்து பிப். 18 ஆம் தேதிக்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் www.perambalur.nic.in என்ற இணையத்தில் உள்ளது.
Comments
Post a Comment