ஆகம விதிப்படியே கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் அர்ச்சகர் படிப்பு படித்த மாணவர்கள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தி.மு.க. ஆட்சிக் காலத்தின்போது (2007-08) தொடங்கப்பட்ட அர்ச்சகர் படிப்பை முடித்த 206
மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
அவ்வாறு அர்ச்சகர் படித்து முடித்தவர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 38 ஆயிரத்துக்கும் அதிகமான திருக்கோயில்களில் அர்ச்சகராகலாம் என கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உத்தரவு பிறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஒன்றரை ஆண்டு கால படிப்பும் 2007-08 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட்டது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் முதல் பட்டப்படிப்பு படித்தவர் வரை இந்த அர்ச்சகர் படிப்பை படிக்கலாம்.
இதுகுறித்து, அர்ச்சகர் மாணவர் சங்கத்தினர், சென்னையில் புதன்கிழமை கூறியது:
அர்ச்சகர் படிப்பை இதுவரை 206 பேர் படித்து முடித்துள்ளனர். இரண்டு வைணவம், நான்கு சைவப் படிப்புகள் ஒன்றரை ஆண்டு காலத்துக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. அர்ச்சகர் படிப்பை படித்து கோயில்களில் பணியாற்றச் சென்றால், அந்தக் கோயில்களைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடைபெறும் வாய்ப்புகள் இருந்து வருகின்றன என்று தெரிவிக்கின்றனர்.
இப்போது உச்ச நீதிமன்றம் வரை வழக்கு சென்று, ஆகம விதிப்படி நியமிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவால் அர்ச்சகர் படிப்பு படித்த எங்களின் நிலை என்ன என்று தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment