7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு எதிர்ப்பு: வேலைநிறுத்தத்தில் ஈடுபட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு.
மத்திய அரசு ஊழியர்கள், 7-வது ஊதியக் குழு பரிந்துரையைக் கண்டித்து வரும் 24-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், காலவரையற்ற வேலைநிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அமைத்த 7-வது ஊதியக் குழு பரிந்துரையில் அரசு ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். 5, 6-வது ஊதியக் குழுவில் 40 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால், 7-வது குழு வெறும் 14.2 சதவீதம் அளவுக்கு மட்டுமே ஊதிய உயர்வை பரிந்துரைத்துள்ளது. தேசிய ஊழியர் கவுன்சில், 7-வது ஊதியக் குழுவிடம் அளித்த மனுவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. ஆனால், இக்குழு ரூ.18 ஆயிரம் மட்டுமே குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. மேலும், செயலர் பதவிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.2.25 லட்சம் என உயர்த்தி பரிந்துரைத்துள்ளது. இது இக்குழு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட 12.5 மடங்கு அதிகமாகும். இதேபோல, கேபினட் செயலர் பதவிகளுக்கு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.2.50 லட்சம் என்பது, இக்குழு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட 14 மடங்கு அதிகமாகும். மேலும், 7-வது ஊதியக் குழு பரிந்துரையில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை, வாகனம் வாங்குவதற்கான முன்பணம், ரிஸ்க் அலவன்ஸ் உள்ளிட்ட சலுகைகளை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் 30 லட்சம் பேரும், பாதுகாப்புத் துறை சிவில் ஊழியர்கள் 4 லட்சம் பேரும், 12 லட்சம் பாதுகாப்பு படை வீரர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, குழுவின் பரிந்துரையைக் கண்டித்து வரும் 27-ம் தேதி நாடு தழுவிய அளவில் மத்திய அரசு ஊழியர்கள் கருப்பு தினமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.