ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் தீபாவளிக்கு முன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மனோகர் பார்ரிக்கர் தகவல்
ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் என்ற முன்னாள் ராணுவத்தினரின் நீண்ட கால கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அறிவித்தது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ
அறிவிக்கை வெளியிடப்படவில்லை. பீகார் சட்டசபை தேர்தலையட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால்தான் இது வெளியிடப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் முன்னாள் ராணுவத்தினர், தாங்கள் பெற்ற பதக்கங்களை 9-ந் தேதி முதல் திரும்ப ஒப்படைத்துப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதற்கிடையே ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கை எப்போது வெளியிடப்படும்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தீபாவளிக்கு முன்னதாக வெளியிடப்படும் என பதில் அளித்தார்.