தமிழகத்தில் உள்ள 35 பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டு, ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணா இன்று 05.10.2015 தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பால் வளத்திட்டங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணப் பட்டுவாடா மற்றும் பால் பொருட்கள் விற்பனை குறித்து ஆவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பால் வளத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் பணப் பட்டுவாடா குறித்தும் கேட்டறிந்த அமைச்சர் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் குறிப்பிட்ட காலங்களில் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். ஆவின் பால் பொருட்கள் நுகர்வோர்க்கு தங்குதடையின்றி கிடைக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 240 புதிய சில்லறை விற்பனை கடைகள் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களில் 68 சில்லறை விற்பனை கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. 16 ஆவின் வட்டார அலுவலகங்களைச் சார்ந்த பகுதிகளில், 32 பிரத்யேக ஆவின் விற்பனை நிலையங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டு 16 விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 35 பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டு, ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.