ரிசர்வ் வங்கி நேற்று, குறுகிய காலக்கடனுக்கான வங்கி வட்டி விகிதத்தில், அதிரடியாக, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனங்கள் வாங்குவோருக்கான கடன் சுமை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சீன பொருளாதாரம் மந்தமடைந்து வருவதால், உலக பொருளாதாரத்தில் தடுமாற்றம் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார தேக்கநிலை நிலவுகிறது. இதனால், இந்திய பொருளாதாரம் பாதிப்படைந்து, சிக்கலை சந்தித்து வருகிறது.இந்திய பொருளாதாரத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வேண்டுமென, தொழில் துறையினரும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தன. அதற்கு, அதிகமாக அழுத்தம் தரப்பட்டு வந்ததால், குறைந்தபட்சம், 0.25 சதவீதமாவது வட்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் நான்காவது நிதிக் கொள்கையை, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், மும்பை யில் நேற்று வெளியிட்டார்.