திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்குமா? கல்வித்துறை தூக்கம்: மாணவர்கள் தவிப்பு.
திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, கிராம பகுதி மாணவர்களுக்கு, கடந்தஇரண்டு ஆண்டுகளாக, கல்வி உதவித் தொகை வழங்கவில்லை. இந்த ஆண்டு, தேர்வு முடிவுகளையும் முறையாக வெளியிடாததால்,
மத்திய அரசின் திட்டம் கிடப்புக்கு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை கிராமப்புற மாணவர்கள், பள்ளி கல்வியை இடையில் நிறுத்தி விடாமல், பிளஸ் 2 வரை படிக்கும் வகையில், மத்தியஅரசு சார்பில், பல்வேறு திட்டங்களில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இவற்றில், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, திறனறித் தேர்வு அடிப்படையில், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும், மத்திய அரசால், மாநில அரசின் மூலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, எட்டாம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், மாநில அளவில் நடத்தப்படும், திறனறித் தேர்வை எழுதுவர். ஒவ்வொரு ஆண்டும், நான்கு லட்சம் பேர், தேர்வில் பங்கேற்பர். அவர்களில், 6,995 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாதம் தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகைவழங்கப்படும். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 14 ஆயிரம் பேருக்கு, இன்னும் உதவித்தொகை வழங்கவில்லை. மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம், இந்தப் பணம், மாணவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படும். ஆனால், இதுவரை உதவித்தொகை வழங்க, பள்ளிக்கல்விதுறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தவிப்பு:
இரண்டு ஆண்டுகள் வழங்க வேண்டிய, 8.40 லட்சம் ரூபாய், மத்திய அரசிடமிருந்து வந்தும், என்ன ஆனது எனத் தெரியாமல், மாணவர்களும், பெற்றோரும் தவிக்கின்றனர். இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான திறனறித் தேர்வு முடிந்து, ஆறு மாதங்களுக்கு பின், தேர்வு முடிவை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுத்துறை அனுப்பியது. ஆனால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலிருந்து, பள்ளிகளுக்கு தேர்வு முடிவுகளையும், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலையும் இன்னும் அனுப்பவில்லை.