மதுரை:தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பில், கல்வித்துறை தொடர்ந்து மவுனம் காத்து வருவதால், ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.நடப்பாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு,
முதுகலை பட்டதாரி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல், ஆகஸ்டில் நடத்தி முடிக்கப்பட்டது.
மேலும் ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் முடிந்தது.ஆனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 'சர்பிளஸ்' ஆசிரியர் பணிநிரவல் செய்யப்பட்ட பின் பொதுமாறுதல் கலந்தாய்வு
நடத்தப்படும், என கல்வித்துறை அறிவித்தது. இதன்படி, பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் ஆகஸ்டில் நடந்து முடிந்தது. ஆனால், பொதுமாறுதல் கலந்தாய்விற்கான தேதி, இதுவரை அறிவிக்கப்படாமல் கல்வித்துறை மவுனம் காத்து வருகிறது.
இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் நாகசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:
மாநிலத்தில் 2 லட்சத்திற்கும் மேல் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். பணிநிரவல் முடிந்த பின், பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை நடத்தவில்லை. எங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பின் தான், இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள், நேரடி பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். அரசின் பட்ஜெட்டில் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர்கள் பணி நியமனம், தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் விவரம் குறிப்பிடாமல், முந்தைய நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, இந்தாண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் விவரத்தையும் அரசு வெளியிட வேண்டும், என்றனர்.