விடுதியில் இடப் பற்றாக்குறையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட, சென்னை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு திங்கள்கிழமை வகுப்புகள் தொடங்கின.
பாரிமுனையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி
மாணவர்கள் விடுதியில் போதிய இட வசதி இல்லை, அதனால் முதலாமாண்டு மாணவர்களை விடுதியில் அனுமதிக்கக் கூடாது என்று கூறி மூத்த மாணவர்கள் வகுப்புகள் தொடங்கிய முதல் நாளான செப்டம்பர் 1-ஆம் தேதி போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்கள் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யும் வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஏற்பாடுகள்: சென்னை மருத்துவக் கல்லூரிக்கு எதிரே உள்ள மருத்துவ மாணவிகளின் பழைய விடுதியில் தங்கியிருந்த 75 பெண் பயிற்சி மருத்துவர்கள், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் காலியாக இருந்த அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
பயிற்சி மருத்துவர்கள் தங்கியிருந்த விடுதியில் முதலாமாண்டு பி.பார்ம். மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதே விடுதிக்கு பாரிமுனை மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ள மூத்த பி.பார்ம். மாணவர்கள் 300 பேரையும் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, முதலாமாண்டு மாணவர்கள் சுமார் 160 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை விடுதியில் சேர்க்கை நடைபெற்றது.
பி.பார்ம். மாணவர்கள் முழுமையாக மாற்றப்படும்போது, மருத்துவ மாணவர்கள் தங்குவதற்கு போதிய இடவசதி கிடைக்கும் என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு திங்கள்கிழமை வகுப்புகள் தொடங்கின என கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.