மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், 915 பட்டதாரிகள், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யாததால், அவர்களின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்துள்ளது.
தமிழக பொது சுகாதாரத் துறையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதிகாரி பணிக்கான, 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 20ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான அனுமதிச் சீட்டு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்களில், 44 பேருக்கு சரியான கல்வித் தகுதியில்லாததால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், கல்வித்தகுதி இருந்தும், 915 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அதில், 'தேர்வு எழுத தேவையான கல்வித் தகுதியான, பி.எஸ்சி., நர்சிங் படித்திருந்தும், 915 பேரும், அரசு வேலைக்கான நர்சிங் கவுன்சிலில் தங்களின் பட்டப்படிப்பை பதிவு செய்யவில்லை.
அதனால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன' என, தெரிவித்துள்ளது. நர்சிங் முடித்தவர்கள், அரசுப் பணியில் சேர, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும் என்பது, தமிழக செவிலியர் பணிகள் சட்டப்படி கட்டாயமாகும்.