கட்டுமானப் பணிகளை முடித்து ஒப்படைக்க, இ.எஸ்.ஐ., இயக்குனரகம் சம்மதித்துள்ளதால், கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியை, தமிழக அரசு ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், சென்னை மற்றும் கோவையிலும், நாடு முழுவதும், 13 இடங்களிலும், இ.எஸ்.ஐ.,
மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. நிதிச்சுமையால் நிர்வகிக்க முடியாமல் திணறிய, இ.எஸ்.ஐ., இயக்குனரகம், கல்லுாரிகளை இழுத்து மூட முடிவு செய்தது.
மாணவர்களின் தொடர் போராட்டத்தால், முடிவை மாற்றிய இயக்குனரகம், &'கல்லுாரிகள் தொடர்ந்து செயல்படும்; மாநில அரசுகள் விரும்பினால் ஒப்படைக்க தயார் என, அறிவித்தது. தமிழகத்தில் உள்ள, இரண்டு கல்லுாரிகளையும் ஏற்கும்படி, மாநில அரசை வலியுறுத்திய இயக்குனரகம், கட்டுமானப் பணி, நிலத்திற்கான பணத்தை தர வேண்டும் என, நிபந்தனை விதித்தது.
செயல்பாட்டுக்கு வராத, கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியின் கட்டுமானப் பணிகளை முற்றிலும் முடித்து கொடுத்தால், ஏற்க தயார் என, தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து, இருதரப்பிலும் பேச்சு நடந்தது. இந்நிலையில், சென்னை கே.கே.,நகர் இ.எஸ்.ஐ., கல்லுாரியை தொடர்ந்து நடந்த திட்டமிட்டுள்ள, இ.எஸ்.ஐ., இயக்குனரகம், கோவை கல்லுாரி பணிகளை முடித்து, தமிழக அரசிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது. அதே நேரத்தில், பல குறைகளைச் சுட்டிக்காட்டி, நாட்டில் உள்ள, 13 இ.எஸ்.ஐ., கல்லுாரிகளிலும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி, 580 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள, 5 சதவீத பணிகளை முடித்து தர, இ.எஸ்.ஐ., இயக்குனரகம் சம்மதித்துள்ளதால், மாநில அரசு ஏற்று, அரசு மருத்துவக் கல்லுாரியாக நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், அங்குள்ள மருத்துவமனை, இ.எஸ்.ஐ., தொழிலாளர்களுக்கான மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படும்.
எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாநில அரசுக்கு - 65; மத்திய அரசுக்கு - 15; இ.எஸ்.ஐ., தொழிலாளர்களுக்கு, 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். நடைமுறைச் சிக்கல் தீர்ந்து, அடுத்த ஆண்டில், கல்லுாரி செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.