மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அக்டோபர் 8-இல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில்,அடுத்தகட்டப் போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் இந்தக் குழுவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.அடுத்தகட்டமாக, வரும் அக்டோபர் 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக, அந்தக் குழுவின் மாநிலத் தொடர்பாளரும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவருமான இளங்கோவன் தெரிவித்தார்.