TNPSC : முதல்முறையாக மற்ற தேர்வர்களின் மதிப்பெண்ணையும் பார்க்கலாம் குரூப் 2 கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கலந்தாய்வில் பங்கேற்போருக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் ேதர்வாணைய
தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவிகள் அடங்கிய உதவி பிரிவு அதிகாரி (மாவட்ட வணிகவரித்துறை), சப்-ரிஜிஸ்திரார், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 1,136 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த ஆண்டு நவம்பர் 8, 9ம் தேதிகளில் நடத்தியது. அதை தொடர்ந்து நேர்முக தேர்வு ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்தப்பட்டது. இதில், 2,222 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில், கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தரவரிசை பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் பொதுவரிசை நிலை (ஓவரால் ரேங்க்), வகுப்பு வாரியான தரவரிசை நிலை, சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்கள் தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றை தங்களின் பதிவு எண் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இவ்வகையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் முதல்முறையாக தேர்வாளர்கள் தங்களது எண்ணை உள்ளீடு செய்து மற்றவர்கள் என்ன மதிப்பெண் மற்றும் ரேங்க் பெற்றுள்ளனர் என்பதையும் பார்க்க முடியும். மேலும், கலந்தாய்வில் பங்கேற்போர் எந்த நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விவரமும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.