''வீட்டை விட்டு வெளியே வராத மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, சிகிச்சைஅளிக்க வேண்டும்'' என, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்துக்கே சென்று,
சிகிச்சை அளிக்க, 4.50 கோடி ரூபாய் செலவில், 31 நகரும் சிகிச்சை பிரிவு வாகன சேவையை, முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம், 16ம் தேதி துவக்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும், சிறப்பு வசதிகள், இந்த வாகனங்களில் உள்ளன. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பணியாற்றும் முடநீக்கு வல்லுனர்கள், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர்கள், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்துக்கே சென்று சிகிச்சை அளிப்பர் என, அறிவிக்கப்பட்டது.
சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தலைமையில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில், வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமலும், வெளியில் சென்றால், கவுரவம் பாதிக்கும் என நினைத்து, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகளை, வீடு வீடாகச் சென்று, கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஒரு பகுதிக்கு செல்வதற்கு முன், அதுபற்றி அறிவிப்பு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அதிகம் உள்ள இடங்களில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, அறிவுரைகள் வழங்கப்பட்டன