அஞ்சலகங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் அடையாள எண்ணைத் தெரிவிக்குமாறு அஞ்சல் துறைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பு: சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில் 20 தலைமை அஞ்சலகங்கள், பல்வேறு துணை அஞ்சலகங்கள் செயல்படுகின்றன.
இவற்றின் வாயிலாக மாதந்தோறும் அரசு, அதை சார்ந்த நிறுவனங்களின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பல்வேறு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழ் (LIFE CERTIFICATE) பெறும் முறையை ஒழுங்குபடுத்துவதற்காக, அஞ்சலகங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களின் ஆதார் அடையாள எண்ணை தெரியப்படுத்த வேண்டும். அதாவது, தாங்கள் ஓய்வூதியம் பெறும் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும்.
அஞ்சல் அலுவலகங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்துக்குள் தங்களின் ஆதார் அடையாள அட்டையின் நகலில், தங்களின் ஓய்வூதிய ஆணை எண்ணை (Pension Payment Order number) எழுதி, தாங்கள் ஓய்வூதியம் பெறும் அஞ்சல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அனைத்து ஓய்வூதியதாரர்களும், அஞ்சல் துறையின் வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.