திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சி. திருச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகப் பதிவாளர் பணியிடத்துக்கு நிரந்தரமாக
ஆள்கள் நியமிக்கப்படாமல், மற்றத் துறைகளில் பணியாற்றுவோர் பொறுப்பு அளவிலேயே பதிவாளராக நியமிக்கப்பட்டிருந்தனர்.
பதிவாளர் பணியிடத்துக்கு நிரந்தர அளவில் நியமனம் நடைபெற வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
கடந்த 23-ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பணிக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 7 பேர் பங்கேற்றனர். இதில், புதுகை அரசு மன்னர் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் ச. திருச்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 24-ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்திலும் பதிவாளர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடந்த 1987-ஆம் ஆண்டு புதுகை மன்னர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக தனது பணியைத் தொடங்கிய திருச்செல்வம், பூலாங்குடி, மன்னார்குடி உள்ளிட்ட 28 கல்லூரிகளில் பணியாற்றியுள்ளார்.
தற்போது, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலராகவும் திருச்செல்வம் இருந்து வருகிறார்.