Skip to main content

கலாமை நினைத்து உருகும் ஓவிய ஆசிரியர்: "தொலைபேசி உரையாடல் இன்றும் ஒலிக்கிறது'


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடிய திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் கணேசன், இன்றும் தனது செவியில் அந்த உரையாடல் ஒலித்துக் கொண்டிருப்பதாக
உருக்கமுடன் தெரிவித்தார்.
இவர், அப்துல் கலாமின் உருவத்தை பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு 32 ஓவியங்களாகப் படைத்தவர்.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை கிராமத்தைச் சேர்ந்தவர் எம். கணேசன் (39). பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணிபுரியும் இவர், சேலத்தில் 2010ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய அறிவியல் கண்காட்சியில் அப்துல் கலாமின்  ஓவியத்தை வரைந்தார். பார்வையாளர்கள் அனைவரும் இந்த ஓவியத்துக்கே அதிக முக்கியத்துவம் அளித்து பார்வையிட்டதால், அப்துல் கலாம் உருவத்தை பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தி வரையத் தொடங்கினார். தீக்குச்சி, நூல், ஐஸ் குச்சி,  வளையல்கள், உடைந்த கண்ணாடிப் பொருள்கள், பாசிமணிகள் என பல்வேறு பொருள்களைக் கொண்டும் பல வண்ணங்களில் ஓவியம் வரைந்துள்ளார். இதுவரை 32 ஓவியங்களை வரைந்துள்ளார். இந்த ஓவியங்களை இவரது நண்பர் ஒருவர் அப்துல் கலாமின் இணையதள முகவரிக்கு அனுப்பியவுடன் கலாமிடம் இருந்து அழைப்பு வந்தது.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி கணேசனை, செல்லிடப்பேசியில் கலாமே தொடர்புகொண்டு பேசி பாராட்டு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது ரூ.10 ஆயிரத்துக்கான பரிசுத் தொகையையும் அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வை இப்போதும் நினைத்து உருகும் ஓவிய ஆசிரியர் கணேசன் கூறியது: கலாம் பேசுகிறார் என்றபோது என்னால் நம்பமுடியவில்லை. அவரிடம் எந்த மொழியில் உரையாடுவது என்ற ஐயமும் இருந்தது. ஆனால், அழகுத் தமிழில் அவரே பேசினார். சொந்த கிராமத்துப் பெயரான பத்தமடை எனக் கூறியதும் பத்தமடை பாய் பிரபலம் என்பதைக் குறிப்பிட்டார். எனது கிராமம், குடும்பம், தொழில், ஓவியத்துக்கான செலவு ஆகியவற்றை 7 நிமிடங்கள் கேட்டறிந்தார். எதற்காக என்னை முன்னிலைப்படுத்தியுள்ளாய் எனவும் கேட்டார். மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தங்களை தீட்டுவதன் மூலம் மாணவ சமுதாயத்துக்கு என்னால் ஆன சிறு உதவியை அளித்த திருப்தி உள்ளது என்றேன். திருநெல்வேலி வரும்போது சந்திப்பதாகக் கூறினார். ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்கும் முன்பே அவரை தவற விட்டுவிட்டேன் என கண்ணீர் சிந்தினார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன