அரசு பள்ளிகளில் பணியாற்றும் 2,000 துப்புரவு பணியாளர்களுக்கு இம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாதம் ரூ.3,000 சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் 2012 நவம்பரில்
துப்புரவாளர்கள் என்ற பெயரில் துப்புரவு பணியாளர்கள் 2,000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசாணை வெளியிடப்படும். இந்நிலையில் இம்மாதம் ஊதியம் பெறுவது குறித்து நேற்றுவரை எந்த உத்தரவும் இல்லை.
அப்பணியாளர்கள் கூறுகையில்,“எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும் என்றாலும் அரசு வேலை என்பதால் பெரும்பாலும் டிகிரி முடித்தவர்களே இதில் உள்ளனர். இன்றைய பொருளாதார சூழ்நிலையில் மாத ஊதியம் ரூ.3,000 என்பது மிக மிக குறைவு. குடும்பத்தினருடன் கஷ்டப்பட்டு வருகிறோம். அரசாணை எதுவும் வராததால் இம்மாத ஊதியம் அடுத்த மாத துவக்கத்தில் எங்களுக்கு கிடைக்குமா என்ற கலக்கத்தில் உள்ளோம்.
மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டால் சென்னை பள்ளிக்கல்வித்துறையில் முறையிட கூறுகின்றனர். எங்களது மாத ஊதியத்தை உயர்த்தி அது முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.