மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 172 சமையலர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் 800 பேர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் காலியாக
இருக்கும் சத்துணவு சமையலர் பணிக்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பாலசுப்பிரமணியன் தலைமையில் 10 குழுக்கள் நேர்முகத் தேர்வை நடத்தின. ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் ஒவ்வொன்றிலும் 10-லிருந்து 20 காலியிடங்கள் என மொத்தம் 172 இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 800 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். நேர்முகத் தேர்வில் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.
தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என சத்துணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.