எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது; 510 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, 17 பேர் முக்கிய கல்லுாரிகளில் இடம் பெறுகின்றனர்.அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில், 2,257 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 85 பி.டி.எஸ்.,
இடங்களும் உள்ளன.
சுய நிதி மருத்துவக் கல்லுாரிகளில், 530 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. தொடர்ந்து, 23ம் தேதி வரை, பொதுப் பிரிவு கலந்தாய்வும், 'கம்யூனிட்டி' வாரியான கலந்தாய்வு, 24, 25ம் தேதிகளிலும் நடக்கிறது. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும், பி.டி.எஸ்., இடங்கள் சேர்க்கப்படவில்லை. 'இந்த இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவ வீரரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என, சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 125 பேர் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகள் பிரிவில், 65 பேர்; விளையாட்டுப் பிரிவில், மூன்று பேர்; முன்னாள் ராணுவ வீரர் குழந்தைகள் பிரிவில், ஆறு பேர் இடம் பெற்றனர்.மாற்றுத் திறனாளிகள்: மொத்தம், 68 இடங்களுக்கு, 80 மாற்றுத் திறனாளிகள் சென்றனர். மூன்று பேர் கொண்ட டாக்டர் குழு, உடல் பாதிப்புக்கான சான்றிதழ்களை ஆய்வு செய்ததோடு, பாதிப்பின் தன்மை குறித்தும் ஆய்வு செய்தது. இதில், 15 பேர் நிராகரிக்கப்பட்டனர்.