ஆய்வக உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே நியமனம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் 4,362 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த மே
31-ந்தேதி தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துக் கொண்டு தேர்வு எழுதியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த தேர்வு முறையை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
ஆய்வக உதவியாளர் பணிக்கு போட்டித் தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், கடந்த மே 31-ந்தேதி தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வும் நடந்து முடிந்துள்ளது. இந்த எழுத்துத் தேர்வு, போட்டியில் இருந்து ஆட்களை குறைப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது.
அதாவது எழுத்து தேர்வில் பெறப்படும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் நேர்முகத் தேர்வில் 25 மதிப்பெண்களுக்கு ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே ஒரு வழக்கில் பிறப்பித்த தீர்ப்புக்கும், இந்திய அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. எனவே, இந்த தேர்வு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன், கடந்த 3-ந்தேதி விசாரித்து பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஆய்வக உதவியாளர் பணிக்கு கடந்த மே 31-ந் தேதிதான் எழுத்துத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யப்படுவார்கள் என்றால், இந்த தேர்வு தகுதி அடிப்படையில் நடைபெறாது என்று கூறுவதற்கு முகாந்திரம் உள்ளதாக கருதுகிறேன்.
மேலும் மனுதாரர் தரப்பு வக்கீல், ‘ஆய்வக உதவியாளர் பணி என்பது இளநிலை உதவியாளர் பணிக்கு இணையானது. இளநிலை உதவியாளர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி. எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தும், நேர்முகத் தேர்வு நடத்தாது. அப்படி இருக்கும்போது அதற்கு நேர்மாறாக ஆய்வக உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வது நியாயமற்றது.
மேலும் ஆய்வக உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் முலமே ஆட்களை தேர்வு செய்யவேண்டும் என்று கடந்த 2003ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்றும் வாதிட்டார்.
எனவே, தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், மனுதாரர் கூறுவதுபோல எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன நடவடிக்கை நடைபெறாதா? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, ‘ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வில் எடுத்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண், பள்ளிப்படிப்பில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்டவைகளை கொண்ட வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடத்தப்படும்’ என்று கூறினார். இதையடுத்த விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.