தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 142 ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகப் பூர்த்தி செய்து கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு அரசுத் துறைகளிலும் ஜீப் ஓட்டுநர் உள்ளிட்ட சில பணியிடங்கள் டெக்ஸ்கோ நிறுவனம் மூலமாக அ
வுட்சோர்சிங் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிறுவனத்திடம் தகுதிவாய்ந்த ஓட்டுநர்கள் இல்லாதநிலையில், தடையின்மை சான்று பெற்று வேலைவாய்ப்பகம் மூலமாக பூர்த்தி செய்து கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், தடையின்மை சான்று பெறுவதற்கு காலதாமதம் ஆவதால் வருவாய்த் துறையில் ஓட்டுநர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக இருப்பதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் கூறி வந்தது. மேலும் இப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகப் பூர்த்தி செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. அண்மையில், வருவாய்த் துறை அலுவலர் சங்கம் இந்த கோரிக்கை உள்பட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து இருந்தது. பின்னர் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் தொடர் நடவடிக்கையாக, வருவாய்த் துறையில் காலியாக இருக்கும் 142 ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகப் பூர்த்தி செய்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை வருவாய்த் துறைச் செயலர் ஆர்.வெங்கடேசன், ஜூன் 23 ஆம் தேதி பிறப்பித்துள்ளார். இதன்படி, தமிழகம் முழுவதும் வருவாய்த் துறைகளில் காலியாக உள்ள 142 ஜீப் ஓட்டுநர் பணியிடங்களில், நடப்பு நிதியாண்டில் (2015-16) 71 இடங்களையும், அடுத்த நிதியாண்டில் (2016-17) 71 இடங்களையும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.