நில அளவைத்துறையில், 60 சதவீத, 'சர்வேயர்' பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், நில அளவைப்பணி முடங்கி உள்ளது.
அரசு, தனியாருக்கு சொந்தமான நிலங்களை சர்வே செய்யும் பணியை, நில அளவைத்துறை செய்கிறது. இத்துறையில், 'சர்வேயர்' ப
ணியிடங்கள், 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தன. கடந்த, 2013ல், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' மூலம், 432 'சர்வேயர்கள்' நியமிக்கப்பட்டனர். அவர்களில், 210 பேர், 'குரூப் - 2' தேர்வில் தேர்ச்சி பெற்று, வேறு பணிகளுக்கு சென்று விட்டனர். தற்போதைய நிலையில், மாநிலம் முழுவதும், 60 சதவீத 'சர்வேயர்' பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், விரைவு பட்டா மாறுதல், அம்மா திட்டங்களில் பட்டா மாறுதல் உத்தரவு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, 'பிர்க்கா சர்வேயர்', சார் - ஆய்வாளர் பணியிடங்களில், அதிகளவு இடங்கள் காலியாக உள்ளன. இதனால், அரசுக்கு தேவையான நிலங்களை ஆர்ஜிதம் செய்வது, நிலங்களை உட்பிரிவுகளாக பிரிப்பது, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறையில், நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நில அளவைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., மூலம், விரைவில், சர்வேயர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிர்க்கா சர்வேயர், சார் - ஆய்வாளர் பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஆனால், சர்வேயர் பற்றாக்குறையால், அப்பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.