வர்த்தகத்தில் உள்ள கலாச்சார தாக்கத்தை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ‘பஃபா பஃபா’ என்ற விளையாட்டை உருவாக்கிய அமெரிக்க வாழ் இந்தியரான உதவி பேராசிரியைக்கு புதுமையான கற்பி
த்தல் முறைகளுக்கான மதிப்புமிக்க பெல்டியர் விருது கிடைத்துள்ளது.
இந்தியாவில் பிறந்த ரஜனி கணேஷ் பிள்ளை, புனே கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும், புளோரிடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
தற்போது, வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் குறித்து மாணவர்களுக்கு கற்பித்து வரும் இவர், வர்த்தகத்தில் கலாச்சாரத்தின் பங்கு குறித்தும் அது எப்படி பரிவர்த்தனைகள் மற்றும் வர்த்தக உறவுகளை பாதிக்கிறது என்பதையும் விளக்கும் வகையில் ‘பஃபா பஃபா’ என்ற விளையாட்டை உருவாக்கியுள்ளார். இது மாணவர்கள் மார்க்கெட்டிங் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாக பல வர்த்தக அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.
இவரது இந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், புதுமையான கற்பித்தல் முறைகளுக்கான மதிப்புமிக்க பெல்டியர் விருதை அளிப்பதாக வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ரஜனி உட்பட 4 பேர் இந்த சிறப்புமிக்க விருதினை மே 6-ம் தேதி நடைபெறும் பிரம்மாண்டமான ஆண்டுக் கொண்டாட்டத்தின் போது பெறுகின்றனர்.