Skip to main content

ஒரு மணி நேரம் மின் தடையை அமல்படுத்த, அதிகாரிகள் முடிவு

தமிழ்நாடு மின்வாரிய நஷ்டத்தை சமாளிக்க, விரைவில், வீடுகளுக்கு, ஒரு மணி நேரம் மின் தடையை அமல்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், 2008ல், மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, வீடு, தொழிற்சாலை, வணிக மின் இணைப்புகளுக்கு மின் தடை 
அமல்படுத்தப்பட்டது. வீடுகளுக்கு, மின்தடை செய்யப்படும் இடம்,
நேரம் ஆகியவை மின் வாரியம் சார்பில், முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டது.
2,500 மெகாவாட்:
வல்லுார், வடசென்னை, மேட்டூர் விரிவாக்கம் ஆகிய, புதிய அனல் மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, கூடுதலாக, 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்தும், மின் பற்றாக்குறை குறையவில்லை. லோக்சபா தேர்தல் வெற்றி காரணமாக, கடந்த, ஆறு ஆண்டுகளாக அமலில் இருந்த மின் தடையை, கடந்த ஆண்டு ஜூன் முதல், தமிழக அரசு திடீரென ரத்து செய்தது. மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாததால், வேறு வழியில்லாமல், செப்., முதல், தொழிற்சாலைகளுக்கு, மீண்டும் 20 சதவீதம் மின் தடையை அரசு அமல்படுத்தியது. ஆண்டுதோறும், கோடை வெயில் காரணமாக, மார்ச் முதல், மின் தேவை, படிப்படியாக அதிகரித்து, ஜூன், ஜூலை மாதங்களில், அந்த ஆண்டின் உச்ச அளவாக இருக்கும்.
அதன்படி, 2014 மார்ச் மாதம், சராசரியாக, 12 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த மின் தேவை, ஜூன், 24ம் தேதி - 13,775 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச மின் தேவை. ஆனால், தற்போது, மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி, விரைவில் 15 ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம்:
தமிழ்நாடு மின்வாரியம், தனியார் நிறுவனங்களான, மதுரை பவர்,
106; சமல்பட்டி, 105.66; பி.பி.என்., 330.5; ஜி.எம்.ஆர்., 196 மெகாவாட் மின்சாரம்கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. மின் வாரிய அதிகாரிகள், கோடை மின் தேவை அதிகரிப்பை சாதகமாக பயன்படுத்தி, மேற்கண்ட நிறுவனங்களிடம் இருந்து, அதிக விலை கொடுத்து முழு அளவில், மின்சாரத்தை வாங்குவர்.இதற்காக, ஆண்டுக்கு, 5,000 - 6,000 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. ஜி.எம்.ஆர்., ஒப்பந்தம், பிப்., மாதத்துடன் முடிவடைந்ததால், அந்த நிறுவனத்திடமும் மின்சாரம் வாங்கவில்லை.
பற்றாக்குறை:
அதேபோல், மின்வாரிய இழப்பை தவிர்க்க, மதுரை பவர், பி.பி.என்., சமல்பட்டி ஆகிய நிறுவனங்களிடம் இருந்தும், மின்சாரம் வாங்குவதை, மின் வாரிய தலைவர் சாய்குமார் நிறுத்தியுள்ளார். இந்த நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்காததால், தற்போது, 738 மெகா வாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் வாரிய மின் நிலையங்களில், மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தி ஆவதில்லை. இதனால், நாள்தோறும், மின் பற்றாக்குறை 800 - 1,000 மெகாவாட் என்றளவில் உள்ளது. எனவே, கோடையில், குடியிருப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வினியோகிக்க,
தொழிற்சாலைகளுக்கு, கூடுதலாக, 20 சதவீதம் மின்தடை அமல்படுத்த, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், சென்னையில், மே மாதம், 23, 24ம் தேதிகளில் நடக்க உள்ள, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி, அரசு, அதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், தற்போது குடியிருப்புகளுக்கு, ஒரு மணி நேரம், மின்தடை செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் பிரச்னைக்கு தீர்வு காணாத நிலையில், பொய்யான தகவல்களை, ஆட்சி மேலித்திடம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். லோக்சபா தேர்தல் வெற்றி காரணமாக, அதை நம்பி, மின் தடையை, 2014 ஜூன் முதல் ரத்து செய்தனர். ஆனால், அந்த அறிவிப்பு, மூன்று மாதங்கள் கூட நீடிக்கவில்லை. செப்., முதல், தொழிற்சாலைக்கு, மின்தடை அமல்படுத்தப்பட்டது. தற்போது, வாரிய தலைவராக இருக்கும் சாய்குமார், தனியாரிடம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கினாலும், கோடை மின் தேவையை, பூர்த்தி செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்துள்ளார். இந்த உண்மை தகவலை, மின்வாரிய அதிகாரிகள், தமிழக அரசின் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வேறு வழியில்லாமல், ஏப்., 20ம் தேதி முதல், ஜூலை வரை, குடியிருப்புக்கு, சென்னையில், 30 நிமிடம்; மற்ற இடங்களில், ஒரு மணி நேரம் வரை, மின் தடை செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை தயாரிக்கும் பணி, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள எரிசக்தி துறை செயலர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அரசாணை, மின்வாரிய அதிகாரிகளிடம் வழங்கியதும், மின்தடை அமல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன