பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாடாளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. எனவே, அதை தனிப்பட்ட முறையில் கலைக்க முடியாது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
உயர் கல்வியை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் முயற்சிகளை மத்தி
ய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக யுஜிசி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவற்றை மறுசீரமைக்க தனித் தனிக் குழுக்களை மத்திய அமைச்சகம் அமைத்தது.
இதில் யுஜிசி-யைச் சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, அண்மையில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், யுஜிசி-யைக் கலைப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
யுஜிசி-யை மறுசீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட ஹரி கௌதம் கமிட்டி அண்மையில் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை இன்னும் முழுமையாகப் பரிசீலிக்கப்படவில்லை.
இதற்கிடையே, கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் யுஜிசி-யைக் கலைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. இதுவரை அதுபோன்ற எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
மேலும், யுஜிசி என்பது நாடாளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. எனவே, அதை தனிப்பட்ட முறையில் கலைத்துவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.