Skip to main content

யுஜிசி கலைக்கப்படுகிறதா? மத்திய அமைச்சகம் விளக்கம்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாடாளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. எனவே, அதை தனிப்பட்ட முறையில் கலைக்க முடியாது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
உயர் கல்வியை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் முயற்சிகளை மத்தி
ய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக யுஜிசி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவற்றை மறுசீரமைக்க தனித் தனிக் குழுக்களை மத்திய அமைச்சகம் அமைத்தது.
இதில் யுஜிசி-யைச் சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, அண்மையில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், யுஜிசி-யைக் கலைப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
யுஜிசி-யை மறுசீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட ஹரி கௌதம் கமிட்டி அண்மையில் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை இன்னும் முழுமையாகப் பரிசீலிக்கப்படவில்லை.
இதற்கிடையே, கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் யுஜிசி-யைக் கலைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. இதுவரை அதுபோன்ற எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
மேலும், யுஜிசி என்பது நாடாளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. எனவே, அதை தனிப்பட்ட முறையில் கலைத்துவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.