ராஜேந்திர சோழன் வாழ்க்கை வரலாற்றை பள்ளிக் கல்வியில் இடம்பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தினார்.
சிவசுந்தரி கலைக்கூடத்தின் சார்பில் ராஜேந்திர சோழன் மணிமுடி
சூடிய 1,000-ஆவது ஆண்டு நிறைவு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசியது:
தமிழ்நாட்டின் அடையாளங்களை குறிப்பிடும்போது திருவள்ளுவரையும், பாரதியையும் குறிப்பிடலாம். அதேபோல மாகாராஷ்டிரத்தில் சிவாஜியைச் சொல்வதுபோல், தமிழக மன்னர்களில் ராஜ ராஜனையும், ராஜேந்திர சோழனையும்தான் சொல்ல வேண்டும்.
ஆனால் அவர்களைப் பற்றி தமிழ்நாட்டிலேயே பலருக்குத் தெரியவில்லை.
எனவே அவர்களது வாழ்க்கை வரலாறு, ஆட்சி முறை பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக, இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ராஜேந்திர சோழனின் சாம்ராஜ்ஜியமானது அனைத்து திசைகளிலும் பரந்து விரிந்திருந்தது.
மேலும், படைவீரர்களை அதிகாரத்துக்கு உட்பட்டவர்களாக நடத்தாமல் அன்புக்கு உட்பட்டவர்களாக வழிநடத்தியவர் ராஜேந்திர சோழன்.
காலத்துக்குக் காலம் வரலாறு மாறும்; ஏனெனில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படும்போது நாம் அறிந்த வரலாறு குறித்து மாறுபட்ட கருத்துகளும் இருக்கலாம்.
வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீர்: தற்போது காவிரி தண்ணீருக்காக கர்நாடகத்திடம் கையேந்தும் நிலையில் நாம் உள்ளோம். அவர்கள் தர மறுப்பதையே குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல், வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்தாலே இதற்கு தீர்வு ஏற்பட்டுவிடும்.
ஆனால், அன்றே காவிரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்க 50-க்கும் மேற்பட்ட கிளைக் கால்வாய்களை ராஜேந்திர சோழன் வெட்டியது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ராஜேந்திர சோழனைப் பற்றிய உண்மை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாமல் தமிழகம் ராஜேந்திரனுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.