மரியம் சித்திக் என்ற 12 வயது இஸ்லாமிய பள்ளி மாணவி சர்வதேச கீதை போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்து உள்ளார்.
இஸ்கான் அமைப்பு சர்வதேச அளவில் பகவத் கீதை பற்றிய போட்டி ஒன்றை நடத்தியது. இதில் கலந்து கொள்ள மும்பையை சேர்ந்த பள்ளி
ஒன்றின் மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 6-ம் வகுப்பு படிக்கும் மரியம் சித்திக் என்ற மாணவியும் போட்டியில் கலந்து கொண்டார். மொத்தம் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட போட்டியில் மரியம் முதல் பரிசை வென்றுள்ளார்.
இது பற்றி மரியம் கூறும்போது ‘‘எனக்கு எப்போதும் மதங்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. எனவே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தேன். இதற்கு எனது குடும்பமும் ஆதரவு அளித்ததுடன் உதவியாகவும் இருந்தது. அதிகமாக மதநூல்களை படிக்கும்போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது, அது நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கியமான மதம் மனித நேயம் தான்’’ என தெரிவித்து உள்ளார்.
மரியத்தின் தந்தை கூறும்போது ‘‘அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதை எங்கள் குடும்பத்தினர் உறுதியாக நம்புகிறோம். எந்த மதமும் வெறுப்பை போதிக்கவில்லை. ஆனால் சிலர் நம்முடைய குழந்தைகளை தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள். அதை தடுத்து அவர்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டியது நம்முடைய கடமை’’ என தெரிவித்துள்ளார்