ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்போர், காகிதமற்ற பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தும் வகையிலான செல்லிடப்பேசி செயலியை (அப்ளிகேஷன்) ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு புத
ன்கிழமை தொடக்கி வைத்தார்.
முதல் கட்டமாக இந்த வசதி, சென்னையில் எழும்பூர் - தாம்பரம் இடையிலான ரயில் வழித்தடத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
தில்லியிலிருந்து காணொலி முறையில் இந்த வசதியைத் தொடக்கிவைத்து அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது:
இந்தியா முழுவதும் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் நாள்தோறும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். அவர்களுக்கு பயணச் சீட்டு அச்சிடுவதற்காக 1,200 மெட்ரிக் டன் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்தச் செலவைக் குறைக்கும் வகையில், காகிதமற்ற பயணச் சீட்டு முறையைக் கொண்டு வருவதற்கு கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, தற்போது காகிதப் பயணச் சீட்டுக்கு மாற்றாக இந்த செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியில் "கூகுல் பிளே ஸ்டோர்' செயலித் தொகுப்பு மூலமாகவும், "விண்டோஸ் ஸ்டோர்' செயலித் தொகுப்பு வழியாகவும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த செயலிக்குள் சென்று "ரயில்வே வாலட்' மூலமாக பயணக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
அதன் பின்னர், பயணச் சீட்டு உறுதி செய்யப்பட்ட திரையானது, பயணியின் செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும். டிக்கெட் பரிசோதகரிடம் இதைக் காண்பித்தாலே போதுமானது.
மத்திய அரசின் "டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை நோக்கிய ஒரு நடவடிக்கையாக, இந்த முறையை ரயில்வே தகவல் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்தத் திட்டத்தை விரைவில் உருவாக்கி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தமைக்காக அந்த அமைப்புக்கு ரூ.4 கோடி வெகுமதி அளிக்கப்படுகிறது.
இந்த ரயில்வே பயணச் சீட்டு செயலி முறையானது, சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் 15 புறநகர் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், அனைத்து ரயில் நிலையங்களுக்கும் இந்த முறை விரிவுபடுத்தப்படும் என்றார் சுரேஷ் பிரபு.
சென்னையில்... சென்னையைப் பொருத்தவரை, சென்னை கடற்கரை, கோட்டை, பூங்கா, எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி, திருவான்மியூர், திருமயிலை, சென்னை சென்ட்ரல், பெரம்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தானியங்கி இயந்திரங்களையும் பயன்படுத்தலாம்: செயலி மூலம் செல்லிடப்பேசிக்கு வரும் பயணச் சீட்டை, ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் இயந்திரத்தில் இருந்து பதிவிறக்கம் மூலம் பிரதியெடுத்து ரயில் பயணங்களின் போது எடுத்துச் செல்லலாம்.
முன்னதாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அசோக் கே.அகர்வால், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அனுபம் சர்மா, தலைமை வணிக மேலாளர் சரலா பாலகோபால் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.