'தள்ளுபடி விலையில், பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என, தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றம், 'அட்வைஸ்' வழங்கிஉள்ளது.
கோவை, பி.எம்.காலனியை சேர்ந்த ஜெயராமன், 50, கோவை நு
கர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:கோவை, மருதமலை, முதன்மை சாலையில் உள்ள தனியார் மருந்து கடையில், 2012 நவ., 4ம் தேதி, இருமல் மருந்து மற்றும் மாத்திரைகளை, 90 ரூபாய் கொடுத்து வாங்கினேன். மருந்து விற்பனை கடை விளம்பரத்தில், 'இங்கு வாங்கும் மருந்து பொருட்களுக்கு, 18 சதவீதம் விலை தள்ளுபடி செய்யப்படும்' என, கூறியதால் தான் வாங்கினேன். ஆனால், 5 சதவீதம் மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டது. நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். 20 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கில், மருந்து விற்பனை கடைக்காரர் மூலம் தாக்கல் செய்த பதில் மனு:மருந்து பொருட்கள் விற்பனையில் போட்டி அதிகம் உள்ளது. இதை சமாளிக்க, சில பொருட்களுக்கு விலை சலுகை வழங்குவது வழக்கம். விளம்பரத்தில், '18 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படும்' என தான் குறிப்பிட்டிருந்தோம். இதன்படி வாடிக்கையாளர் வாங்கிய மருந்து பொருட்களுக்கு உரிய தள்ளுபடி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. விற்பனையில், நாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுஉள்ளது.மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, மருந்து விற்பனை நிறுவனம் மீது தவறில்லை எனக்கூறி, ஜெயராமன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். சென்னையில் உள்ள, தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றத்தில், ஜெயராமன் மேல்முறையீடு செய்தார்.
இதில், நீதி பிரிவு உறுப்பினர் அண்ணாமலை, உறுப்பினர் பாக்கியவதி இடம் பெற்ற, 'பெஞ்ச்' அளித்த உத்தரவு:விளம்பரத்தில், 'மருந்து பொருட்களுக்கு, 18 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்' என, தான் தெரிவிக்கப்பட்டிருந்தது. '18 சதவீதம் தள்ளுபடி சலுகை வழங்கப்படும்' என, கூறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விற்பனையில், கடைக்காரர் தவறு செய்யவில்லை என, தெரிய வந்து உள்ளது. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே. மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. விளம்பரத்தை பார்த்து தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், விளம்பரத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை முழுவதுமாக தெரிந்து கொண்ட பிறகே பொருட்களை வாங்க வேண்டும். தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குபவர்கள், விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.இவ்வாறு, உத்தரவிடப்பட்டது.