ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ. பிரதானத் தேர்வு) தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம்
செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.
இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலில் ஜே.இ.இ. பிரதானத் தேர்வும், பின்னர் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வும் நடத்தப்படும். இதில், பிரதானத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெற்று, அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
நிகழாண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 4-இல் நடத்தப்படுகிறது. இணையதள தேர்வு ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வறை அனுமதிச் சீட்டுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. அனுமதிச் சீட்டை cbse.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.