அங்கன்வாடி பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காலிப் பணியிடங்களில் 3000 இடங்களை நிரப்பாமல் வைத்திருக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்
தில் தாக்கல் செய்த மனு விவரம்: எங்கள் சங்க உறுப்பினர்கள் சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் குறு அங்கன்வாடி பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு பதவி உயர்வு என்பது இல்லை. தற்போது, அங்கன்வாடி பணியாளர்களுக்கான பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறு அங்கன்வாடி பணியாளர்களாக பணியாற்றி வரும் எங்களை, காலியாக உள்ள பிரதான அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், வயது வரம்பு, வசிப்பிட தூரம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் எங்களை பணியமர்த்தவும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை பிரதான அங்கன்வாடி பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் பிரதான அங்கன்வாடி பணியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்பத் தடை விதித்தது.
இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 17 ஆயிரத்து 150 அங்கன்வாடிப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்க வேண்டும். மேலும், 3,000 காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதாகவும், மீதிப் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கவும் பதில் மனுவில் கோரப்பட்டது.
மேலும், வயது வரம்பு, வசிப்பிடத் தொலைவு போன்ற நிபந்தனைகளை தளர்த்தி அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அங்கன்வாடி பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களின் 3,000 பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும். தவிர, தற்போது குறு அங்கன்வாடி பணியாளர்களாக உள்ளவர்களும், அங்கன்வாடி பணியாளர்கள் நேரடித் தேர்வில் பங்கேற்கலாம் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.