ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழித்தால் ஆபத்து- டாக்டர்கள் எச்சரிக்கை
ஆண்டு தோறும் மார்ச் மாதம் 2–வது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது.
சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்கள்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை மேடவாக்கத்தில் உள்ள மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் நடந்தது. இதில் 500–க்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், ரத்தம் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் மருத்துவ முகாமில் பங்கேற்ற வட்டார மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன், அரசு பொது மருத்துவமனை சிறுநீரகவியல் துறை தலைவர் கோபாலகிருஷ்ணன், பேராசிரியர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சிறுநீரகம் செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவையே சிறுநீரக செயல் இழப்புக்கு முக்கிய காரணம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது நல்லது என்று பரவலாக ஒரு கருத்து உள்ளது. அது தவறு. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பவர்கள் சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.