அடுத்த ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ள, மத்திய அரசு ஊழியர்கள்,
தங்களின் பணிக்காலத்தில் செய்த நல்ல பணிகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்' என, மத்திய பணியாளர் நலத்துறை
அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், ஓய்வு பெற உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்காக, 'அனுபவ்' என்ற, இணையதளத்தை துவக்கி உள்ளது. இந்த இணையதளத்தில், மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் பணிக்காலத்தில் மேற்கொண்ட பாராட்டத்தக்க பணிகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
குறிப்பாக, அடுத்த ஆறு மாதத்தில், ஓய்வு பெற உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தங்களின் அனுபவங்களை, 5,000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, தகுந்த ஆவணங்களுடன், 'அனுபவ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
மத்திய அரசில், பல்வேறு துறைகளில் பணியாற்றும், 437 அதிகாரிகள், அடுத்த ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ளனர். இவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது, அது அவர்களுக்கு திருப்தி அளிப்பதோடு, பணியில் உள்ள மற்ற ஊழியர்களுக்கும் ஒரு துாண்டு கோலாக அமையும். மேலும், தேசிய கட்டமைப்புக்கும், அவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும் என, மத்திய பணியாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.