கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு பத்து நாட்களில் பணி நியமன ஆணை: முற்றுகையிட்டோரிடம் அரசு உறுதி
நேர்முகத்தேர்வு நடந்து, இரண்டு ஆண்டுகள் ஆகியும், பணி ஆணை வழங்கவில்லை என, காத்திருக்கும் பட்டதாரிகள், பதிவாளர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். 'பத்து நாட்களில் நியமன ஆணை அனுப்பப்படும்
' என, அவர்களுக்கு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
தமிழகத்தில், காலியாக உள்ள, 3,569 கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு, 2012 நவம்பரில், எழுத்துத் தேர்வு நடந்தது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்; இரண்டு மாதங்களில், நேர்முகத்தேர்வு நடந்தது. இதில், 7,400 பேர் பங்கேற்றனர். நேர்முகத்தேர்வு நடந்து, இரண்டு ஆண்டுகள் ஆகியும், தேர்வு முடிவுகள் முடிவு வெளியிடாமல், அரசு இழுத்தடித்து வருகிறது. நேர்முகத்தேர்வு எழுதி காத்திருப்போர், பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். 'டிச., 20ம்
தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டு, பணி ஆணை வழங்கப்படும்' என, கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் அறிவித்து இருந்தது. ஆனால், இன்னும் முடிவுகளை வெளியிட்டு, பணி ஆணை வழங்காததால் அதிருப்தி அடைந்தோர் நேற்று காலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை அழைத்து பேசிய பதிவாளர் அலுவலக அதிகாரிகள், 'பட்டியல் தயாராகி விட்டது. இன்னும் பத்து நாட்களில் பணி ஆணை, தபாலில் அனுப்பப்படும்' என, தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.