ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை
ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை
எடுத்து வருகிறது.
ஆதார் அட்டை
இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை, இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக ஆதார் அட்டை பெறாதவர்கள், அவற்றை பதிவு செய்து, பெறுவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான நேரடி மானியத்தை பெறுவதற்கு ஆதார் அட்டை தகவல்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.
வாக்காளர் அட்டையில் இணைக்க...
இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருந்துகொண்டு, அடையாள அட்டை பெற்றிருந்தால், அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் கமிஷன் கருதி, அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
கள்ள ஓட்டு இருக்காது
தேர்தல் கமிஷனின் இந்த திட்டப்படி, ஆதார் அட்டை எண், செல்போன் எண் போன்ற தகவல்கள் வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்கப்படும். இதற்கான பணி, சிறப்பு முகாம்கள் வாயிலாக நடைபெறுகிறபோது, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை சரி செய்யவும் முடியும். குறிப்பாக பெயரில் எழுத்துப்பிழை, பிறந்த தேதியில் தவறு போன்றவற்றை திருத்திக்கொள்ள முடியும்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் தகவல்களை இணைத்து விட்டால், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் (2019–ம் ஆண்டு) வாக்காளர்கள் ஓட்டு போட வருகிறபோது, அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்படும். இதன்மூலம் கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்பு அறவே இல்லாமல் போய் விடும்.
ஆகஸ்டு 15 இலக்கு
வாக்காளர் அட்டையில் ஆதார் அட்டை தகவல்களை இணைக்கும் பணியை ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் செய்து முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு, இது தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது என துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா, உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் தெரிவித்தார்.