தமிழகம் முழுவதும், 65 லட்சம் குழந்தைகளுக்கு, இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், 22ம் தேதி நடக்கிறது. முதற்கட்ட முகாமில், சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் கொடுக்க வேண்டும்.
இளம்பிள்ளைவாத நோய் பாதிப்பில்லாத சமுதாயத்தை ப
டைக்கும் வகையில், நாடு முழுவதும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு இருமுறை, போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முதற்கட்ட முகாம், ஜன., 18ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட முகாம், 22ம் தேதி நடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பஸ், ரயில் நிலையங்கள் என,
மாநிலம் முழுவதும், 43,051 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காலை 7:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மையங்கள் செயல்படும். இதில், சுகாதார பணியாளர், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் என, இரண்டு லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மொத்தம், 65 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர திட்டமிடப்பட்டு உள்ளது. விடுபட்ட குழந்தைகளை கண்டறிய வசதியாக, சொட்டு மருந்து போட்டதும், குழந்தைகள் விரலில், 'மை' வைக்கப்பட உள்ளது. முதற்கட்ட முகாமில், சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், இந்த முகாமிலும் கட்டாயம் கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், சொட்டு மருந்து கொடுக்க மறக்க வேண்டாம் என, பொது சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.